சென்னை: தமிழகத்தில் எதிர்வரும் 30ஆம் தேதி நடைபெற உள்ள முத்துராமலிங்கத் தேவர் குருபூசையில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆண்டுதோறும் ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் தேவர் குருபூசை நடைபெற்று வருகிறது. இதில் தமிழக அரசு சார்பில் முதல்வர், அமைச்சர்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்பது வழக்கமாக உள்ளது.
தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த இரு நாள்களுக்கு முன்பே திரளானோர் பசும்பொன்னில் கூடுவர்.
கடந்த ஆண்டு தேவர் குருபூசையின்போது பிரதமர் மோடி, முத்துராமலிங்கத் தேவரை நினைவுகூர்ந்து தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
"மக்கள் நலனுக்காகவும் சமூக நீதிக்காகவும் வாழ்நாளை அர்ப்பணித்தவர் முத்துராமலிங்கத் தேவர். துணிச்சலும் கனிவான உள்ளமும் கொண்டவர்," எனப் பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த ஆண்டு தேவர் பூசையில் நேரில் வந்து பங்கேற்குமாறு தமிழக பாஜக நிர்வாகிகள் விடுத்த அழைப்பை ஏற்று அவர் தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

