சென்னை: "தமிழக முதல்வருக்கு இரண்டு விதமான பயம் வந்திருக்கிறது. ஒன்று அவருடைய கட்சியில் யார் என்ன செய்வார்கள்? எப்போது செய்வார்கள்? எப்படி செய்வார்கள்? என்பது புரியாமல் ஒரு பயத்தில் இருக்கிறார். இரண்டாவது பயம் பாஜகவின் வளர்ச்சி," என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, விமான நிலையத்தில் செய்தி யாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், மத்திய அரசு இந்தியை மீண்டும் திணிக்க முயற்சிப்பதாக ஆளுங்கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், குற்றம்சாட்டுவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "நானும் சில நாள்களாக தமிழகத்தில் இருக்கின்ற ஆளுங்கட்சி குறிப்பாக திமுகவின் செயல்பாடுகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
"எப்போதெல்லாம் மக்களுக்கு ஆட்சியின் மீது கோபம் வருகிறதோ, அப்போதெல்லாம் திமுக தானாக தவறுகளை செய்து மக்கள் மன்றத்தில் தனக்கு ஓர் அவப்பெயர் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் இந்த இந்தியைக் கையில் எடுப்பார்கள். இது புதிதல்ல. 70 ஆண்டுகளாக தமிழக மக்கள் இதைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்," என்றார்.

