சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. முதல்கட்ட திட்டத்தின்படி இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
நாளுக்கு நாள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதை யடுத்து சென்னையில் புறநகர் பகுதிகளையும் இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் 2வது திட்டத்துக்கு ஆய்வு செய்யப்பட்டது.
அதில் மொத்தம் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. ஏற்கெனவே இரு வழித் தடங்கள் உள்ள நிலையில் 2வது திட்டத்தின் 3வது வழித்தடம் 45.8 கி.மீ. தூரம் கொண்டதாக அமைந்து உள்ளது. 4வது வழித்தடம் 26.1 கி.மீ. தூரம் கொண்டதாக அமைந்துள்ளது. 5வது வழித்தடம் 47 கி.மீ. தூரம் கொண்டதாக இருக்கும்.
இந்த மூன்று வழித்தடங்களுடன் கூடிய 2-வது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற மொத்தம் சுமார் ரூ.62000 கோடி செலவாகும். இதற்கான பணிகள் ஏற்கெனவே சென்னையில் தொடங்கி விட்டன.
சென்னையின் முக்கிய பகுதிகளில் 2வது கட்ட மெட்ரோ ரயில் உயர்மட்ட பாதைகள் அமைப்பதற்கான பணிகள் ஆங்காங்கே தீவிரமாக நடந்து வருகின்றன. உயர்மட்ட பாதை தவிர 3 வழித்தடங்களிலும் சுமார் 42.6 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இந்த 42 கி.மீ. தொலைவு சுரங்கப்பாதையில் மொத்தம் 48 ரயில் நிலையங்கள் உருவாக்கப்பட இருக்கின்றன. சுரங்கப்பாதை அமைப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
இதில் 3வது வழித்தடமான மாதவரம்-சோழிங்கநல்லூர் வரையிலான பாதையில் முக்கியமான பணியான சுரங்கம் தோண்டும் பணி தொடக்க விழா நேற்று மதியம் மாதவரம் பால் பண்ணை பகுதியில் நடந்தது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விழாவில் கலந்து கொண்டார். அவர் மாதவரம் பால் பண்ணை பகுதியில் இருந்து புரசைவாக்கம் கெல்லீஸ் வரை சுரங்கம் தோண்டும் பணியைத் தொடங்கி வைத்தார். இந்த சுரங்கங்களை தோண்டுவதற்காக மூன்று வழித்தடங்களிலும் மொத்தம் 23 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. வரும் 2026ஆம் ஆண்டுக்குள் மெட்ரோ 2ஆம் கட்ட பணிகளை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளில் மாதவரம் பால் பண்ணை பகுதியில் அமைய இருக்கும் மெட்ரோ ரயில் நிலையம் 3 வழித்தடங்கள் சந்திக்கும் மிகப்பெரிய சந்திப்பாக அமைய உள்ளது.
இதனால் மாதவரம் பால் பண்ணையில் அமைய இருக்கும் மெட்ரோ ரயில் நிலையம் சுமார் 16 மீட்டர் ஆழத்தில் அதிநவீன வசதி களை கொண்டதாக இருக்கும்.