சென்னை: ஜல் ஜீவன் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதில் தமிழகம் சிறப்பாகச் செயல்படுவதாக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பாராட்டு தெரி வித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் வகையில், ஜல் ஜீவன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின்கீழ், தமிழகத்தில் 1.24 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டு உள்ளது.
சென்னையில் மத்திய அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரிய கருப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய மத்திய அமைச்சர், தமிழகத்தில் ஜல் ஜீவன் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார்.
ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் ஏறக்குறைய 55 விழுக்காடு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளதாகக் கூறிய அவர், இதன்மூலம் மத்திய அரசின் நோக்கம் நிறைவேறி உள்ளதாகக் கூறினார்.
அந்தத் திட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக அண்மையில் தமிழகத்துக்கு முதல் பரிசுக்கான விருதை மத்திய அரசு வழங்கியிருந்தது.

