செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
25086dda-df74-41a9-af6c-78a1408d298b
-

நாமக்கல்லில் 10,000 அவித்த முட்டைகள் இலவச விநியோகம்

நாமக்கல்: ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 14ல் உலக முட்டை தினம் கொண்டாடப்பட்டு வருவதை அடுத்து, தமிழக கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் சார்பில் நாமக்கல் மக்களுக்கு நேற்று 10,000 அவித்த முட்டைகள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டன. இங்கு நாள் ஒன்றுக்கு 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

40 தொழில்முனைவோருக்கு விருது

சென்னை: மாநில அளவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் 2021-22ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான விருதுகளை கடந்த மாதம் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இந்நிலையில், 38 மாவட்டங்களில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 40 தொழில்முனைவோருக்கான விருதுகளை அமைச்சர் அன்பரசன் வழங்கி கௌரவித்துள்ளார்.

12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

அரியலூர்: காவிரி கரையோரம் உள்ள 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து 60,000 கனஅடி நீர் திறந்து விடப்பட உள்ளதை அடுத்து அரியலூர், கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்களைப் பாதுகாப்பாக இருக்கும்படி அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி எச்சரித்துள்ளார்.

120 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 1,300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று மதிய உணவு நேரத்துக்குப் பிறகு அங்கு ஒருவித துர்நாற்றம் வீசியதாகக் கூறப்படுகிறது. இதனை சுவாசித்த 120 மாணவர்கள் திடீரென வாந்தி எடுத்து, மயங்கினர். இதனையடுத்து அவர்கள் ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

கூவம் கரையில் 65,000 மரக்கன்றுகள்

சென்னை: கூவம் கரையில் ஆக்கிரமிப்புகளைத் தடுக்கவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. அடையாறு ஆற்றங்கரையில் ஏற்கெனவே பணிகள் தொடர்ந்து நடந்துவரும் நிலையில், கூவம் கரையிலும் ஏழு கோடி ரூபாய் மதிப்பில் 65,000 மரக்கன்றுகளை நடுவதற்குத் திட்டமிட்டு, பணிகள் தீவிரமாக நடக்கின்றன.