திருப்பதி: தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தாய்லாந்தில் இருந்து சொந்த ஊர் திரும்பிய மூன்று பேர் விபத்தில் சிக்கி மாண்டனர்.
ஆந்திர மாநிலம், ஓங்கோல், தேவுடு சேருவு பகுதியை சேர்ந்த பவன் குமார், வயது 40, அதே பகுதியை சேர்ந்த பரமேஷ், வயது 44, சீனிவாஸ் ராவ், வயது 44, ஆகிய மூவரும் தாய்லாந்தில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகின்றனர்.
சொந்த ஊரில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தாய்லாந்தில் இருந்து அவர்கள் விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் காரில் புறப்பட்டு சென்றனர். பவன் குமார் காரை ஓட்டிச் சென்றார். ஆந்திர மாநிலம் ஓங்கோல் தேசிய நெடுஞ்சாலையில் ஒகுலபுரம் என்ற இடத்தில் கார் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது கார் மோதியது.
இதில் கார் முழுமையாக நொறுங்கியது.
காரில் இருந்த மூவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஓங்கோல் காவல் நிலைய ஆய்வாளரான சீனிவாஸ் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேதப் பரிசோத னைக்கு அங்குள்ள அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவதற்காக சொந்த ஊர் வந்த 3 பேர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

