அப்துல் கலாமின் பிறந்த நாள்;
குடும்பத்தினர், மக்கள்அஞ்சலி
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே அமைந்துள்ள மறைந்த இந்திய முன்னாள் அதிபர் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் தேசிய நினைவகத்தில் நேற்று அவரது 91 வது பிறந்தநாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வையொட்டி தேசிய நினைவகத்தில் அமைந்துள்ள ஏ.பி.ஜெ அப்துல் கலாம் சமாதி முன்பு ராமேஸ்வரம் பள்ளிவாசல் ஆலிம்சா அப்துல் ரகுமான் தலைமையில் துவா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜமாத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் அப்துல் கலாம் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் அரசு அலுவலர்களும் கலந்துகொண்டு அதன் பின்னர் அப்துல் கலாம் சமாதியில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் மற்றும் ஏபிஜெ அப்துல் கலாம் குடும்பத்தைச் சேர்ந்த அவரது பேரன்கள் ஷேக் சலீம், ஷேக் தாவூத், அவரது அண்ணன் மகள் ஆயிஷா பேகம், மகன் ஜெயினுலாதீன், மற்றும் உறவினர்கள் நிஜாமுதீன் மற்றும் நடிகர் தாமு, ரோட்டரி சங்க நிர்வாகிகள் பொறியாளர் முருகன், மணிகண்டன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ரூ.20 கோடி மதிப்புள்ள
கோயில் சொத்து மீட்பு
சென்னை: சென்னை திருவல்லிக்கேணி திருவெட்டீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான போரூர் கெருகம்பாக்கத்தில் உள்ள 15 கிரவுண்ட் மனை ஆக்கிரமிக்கப்பட்டதாக தெரிகிறது. இதன் சந்தை மதிப்பு ரூ.20 கோடியாகும். இந்தச் சொத்து மீட்கப்பட்டு, கோவில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. கோவில் சொத்து மீட்பு நடவடிக்கையில் இந்து சமய அறநிலையத்துறை சென்னை மண்டல உதவி ஆணையர் எம்.பாஸ்கரன், வட்டாட்சியர் (ஆலய நிர்வாகம்) காளியப்பன் மற்றும் கோவில் அலுவலர்கள் ஈடுபட்டனர்.
தாய்லாந்து சிறையில் 8 தமிழர்கள்
சென்னை: மோசடி கும்பலால் மியன்மாரில் இருந்து தாய்லாந்துக்கு படகு மூலம் கடத்தப்பட்ட எட்டு தமிழர்களிடம் முறையான விசா இல்லாததால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- மியன்மாரில் சட்டவிரோதக் கும்பலிடம் இருந்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீண்ட தமிழகத்தைச் சேர்ந்த 8 பேரும், கேரளாவைச் சேர்ந்த ஒருவரும் தாய்லாந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக வெளி யாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. பணம், உழைப்பு, நிம்மதி, எதிர்காலம் உள்ளிட்ட அனைத்தையும் இழந்து நிற்கும் அவர்களை மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு எட்டு தமிழர்கள் உள்ளிட்ட ஒன்பது பேரையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக் கொண்டார்.

