சென்னை: தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் கடந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கூடியது. சென்னைத் தலைமைச் செயலகத்தில் இதனைச் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு நேற்று காலை தொடங்கி வைத்தார்.
இதில், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, அவரைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் என ஒருவர் கூட பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
அதேசமயம், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம், அவரது ஆதரவு எம்எல்ஏக்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருடன் பாதுகாவலர்கள் சூழ வந்து சட்டமன்றக் கூட்டத்தில் பங்கேற்றார்.
சட்டசபையில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இருக்கைகளிலும் மாற்றம் செய்யப்படவில்லை எனத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
இதன்மூலம், தமிழக சட்டசபை யில் ஓ.பன்னீர்செல்வம் எதிர்க்கட்சித் துணைத்தலைவராக நீடிப்ப தாகக் கூறப்படுகிறது.
நேற்றைய கூட்டத்தில் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, முலாயம்சிங் யாதவ் உள்ளிட்ட ஏழு தலைவர்களின் மறைவுக்கும் கோவை தங்கம் உள்ளிட்ட 10 முன்னாள் எம்எல்ஏக்களின் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பிறகு, இந்தக் கூட்டத் தொடர் நாளை (இன்று) காலை 10 மணிக்கு நடைபெறும் என சபா நாயகர் அப்பாவு ஒத்திவைத்தார்.
இந்தக் கூட்டத்தொடரின்போது துணை நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் தாக்கல் செய்ய உள்ளார்.
ஜெயலலிதா மறைவு தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கை, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை ஆகியவை சட்டப்பேரவையில் முன்வைக்கப்பட உள்ளன.
இணைய ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரை அங்கீகரித்து கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என பழனிசாமி பேரவைத் தலைவரிடம் கடிதம் கொடுத்திருந்தார். இதனை எதிர்த்து, ஓபிஎஸ் தரப்பிலிருந்தும் கடிதம் கொடுத்தனர்.
"எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி விவகாரத்தில் சபாநாயகர் எடுக்கும் முடிவுதான் இறுதியானது. அவர் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்," என்று திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர் களிடம் ஓபிஎஸ் கூறியிருந்தார்.
இதனிடையே, பன்னீர்செல்வம், பழனிசாமி பதவிச் சண்டையால் குழப்பத்தில் தவிக்கும் அதிமுகவை ஓரம் கட்டிவிட்டு அதன் இடத்தைப் பிடிக்க பாஜக திட்டம் வகுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இம்மாதம் தமிழ்நாட்டுக்கு 19 மத்திய அமைச்சர்கள் வருகை தந்துள்ளனர்.
சட்டமன்றக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், "எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் கட்சியைக் கட்டி காப்பாற் றுவதில் உறுதியாக உள்ளோம். அதிமுக சட்டவிதிகளை மாற்றுவது அபாயகரமானது. இது எம்ஜிஆர், ஜெயலலிதா எண்ணத்திற்கு மாறானது," என்றார்.

