சென்னை: திமுக பெண் கவுன்சிலர் உட்பட பத்து பேர் மீது கடத்தல் வழக்கு பதிவாகி உள்ளது. தொழிலதிபரைக் கடத்தி ரூ.25 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக அவர்கள் மீது சென்னை காவல்துறை குற்றம்சாட்டி உள்ளது.
சென்னை அருகே உள்ள சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் அமர் ராம். 53 வயதான இவர், தாம் நாவலூர் பகுதியில் உள்ள 58 சென்ட் நிலத்தை கிருஷ்ணமூர்த்தி என்பவரிடமிருந்து வாங்கி உள்ளார். அந்நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.25 கோடி என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், காவல்துறையில் புகார் அளித்துள்ளார் அமர் ராம்.
தாம் விற்ற நிலத்தை திரும்பக் கேட்டு கிருஷ்ணமூர்த்தி தமக்கு மிரட்டல் விடுத்ததாகவும் இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவதாகவும் தமது புகார் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"இந்நிலையில், நில விவகாரத்தைப் பேசித் தீர்க்கலாம் என்று கூறி, சென்னை கடற்கரைப் பகுதிக்கு வருமாறு வழக்கறிஞர் ஒருவர் மூலம் அழைப்பு விடுத்தனர். அங்கு சென்றபோது அடையாளம் தெரியாத சிலர் என்னைக் கத்திமுனையில் மிரட்டி காரில் கடத்திச் சென்றனர்.
"பின்னர் திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் வைத்து, ஏற்கெனவே என்னிடம் விற்ற நிலத்தை வலுக்கட்டாயமாக மீண்டும் எழுதி வாங்கிக் கொண்டனர்.
"கிருஷ்ணமூர்த்தியும் அவரது மனைவியும் சென்னை மாநகராட்சி 124வது வார்டு திமுக கவுன்சிலருமான விமலா உள்ளிட்ட பத்து பேர் சேர்ந்து இச்செயலில் ஈடுபட்டனர். பிறகு என்னை அடித்து விரட்டி விட்டனர்," என்று அமர்ராம் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து கவுன்சிலர் விமலா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது.

