லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிரதீப் பாண்டே என்ற ஆடவர் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், ரத்த அணுக்களை அதிகரிக்க அவரது உடலில் பிளாஸ்மா என்ற ரத்த நீர்மத்தை ஏற்றியுள்ளனர். ஆனால், அதன்பிறகும் அவரது உடல்நிலை மேலும் மோசமானதால் அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், பிரதீப்புக்கு 'டிரிப்ஸ்' மூலம் ஏற்றப்பட்டது பிளாஸ்மா ரத்த நீர்மம் அல்ல என்பதும் அது ஆரஞ்சு பழச்சாறுதான் என்பதும் தெரியவந்துள்ளது.
ரத்தம் என்று விற்கப்பட்ட பழச்சாறை 'டிரிப்ஸ்' மூலம் நோயாளிக்கு நரம்பு வழியே ஏற்றியதில் பிரதீப் உயிரிழந்தார்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளை வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றி, மருத்துவமனையை மூடி அதிகாரிகள் முத்திரை வைத்துள்ளனர்.

