திருநெல்வேலி: தவில், ட்ரம்ஸ், பியானோ உள்ளிட்ட இசைக் கருவிகள் மீது பாம்பு, ஓணான் உள்ளிட்ட ஊர்வனவை இழைந்தோட, நெல்லையைச் சேர்ந்த 'தி இந்தியன் பீட்டில்ஸ்' இசைக்குழுவினர் இசை 'ஆல்பம்' தயாரித்து வெளியிட்டுள்ளனர்.
கின்னஸ் இசைக் குழுவினரின் இசையில் உயிரினங்கள் மயங்கி நிற்கும் காணொளி பலரையும் ஈர்த்து வருகிறது.
ரஷ்யா-உக்ரேன் போரை உடனடி யாக நிறுத்த வலியுறுத்தியும் உலகில் அன்பும் சமாதானமும் நிலவவும் அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தவேண்டும் என்பன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இசைக்குழுவினர் புதிய இசை ஆல்பத்தை வெளியிட்டு உள்ளனர்.
நெல்லை மாவட்டம், வடக்கன் குளத்தைச் சேர்ந்தவர் முனைவர் அப்துல் ஹலீம். பல்வேறு இசைக்கருவிகளைப் பயன்படுத்தி, இசையில் சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்திலும் ஏற்கெனவே இடம்பிடித்திருக்கிறார். இவர், தற்போது பள்ளி மாணவர்களுக்கு இசை ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், ஆப்பிரிக்க வகை மலைப்பாம்புக் குட்டி, ஓணானுடன் புதிய இசைக் காணொளியை வெளி யிட்டுள்ளார். அவருடன் கின்னஸ் சாதனை படைத்த மாணவர்களும் பங்கேற்றுள்ளனர்.
பாரம்பரிய, மேற்கத்திய இசைக் கருவிகளைக் கொண்டு கலைஞர்கள் படைத்த இசை விருந்தில், பாம்பும் ஓணானும் 2 மணி நேரத்திற்கும் மேலாக எங்கும் நகராமல் அங்கேயே மயங்கி நின்றன.
மற்றொரு கின்னஸ் சாதனைக்காகவும் 'தி இந்தியன் பீட்டில்ஸ்' குழுவினர் இந்த இசை ஆல்பத்தை படைத்துள்ளனர்.

