மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் மழைநீர் கால்வாயில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையைக் காவலர்கள் மீட்டுள்ளனர்.
திருப்புவனம் காவல்நிலைய துணை ஆய்வாளர் சந்திரன், மானா மதுரை சிறப்பு துணை ஆய்வாளர் ராமச்சந்திரன், பெண் காவலர் ராதிகா ஆகிேயார் நேற்று காலை மானாமதுரை துணைச் சாலை அருகில் உள்ள ரயில்வே மேம்பாலம் பகுதியில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கல்லறை தோட்டம் பகுதியை ஒட்டியுள்ள மழைநீர் கால்வாய் கான்கிரீட் சிலாப்புப் பகுதியில் இருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. காவலர்கள் தேடியபோது மழைநீர் கால்வாயில் தண்ணீர் இல்லாத பகுதியில் பிறந்து இரண்டு நாட்களே ஆன குழந்தை ஒன்று கைவிடப்பட்டிருந்தது. குழந்தையை மீட்டு மானா மதுரை அரசு மருத்துவமனையில் காவலர்கள் சேர்த்தனர்.
மழைநீர் கால்வாயில் பச்சிளம் குழந்தையை வீசிவிட்டு சென்றது யார்? என்பது குறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

