தீபாவளி மோசடி: ரூ.3,000க்கு ரூ.15,000 பொருள்கள் கிடைக்கும் என அறிவித்து சதி
செய்யாறு: தீபாவளிப் பண்டிகையைஒட்டி ரூ.3,000 செலுத்தினால் ரூ.15,000க்கான பொருள்களைத் தருவதாகக் கூறி ஒரு மோசடிக் கும்பல் ஏறக்குறைய ஒரு மில்லியன் பேரை ஏமாற்றிவிட்டதாகக் கூறப்படுகிறது.
அந்த மக்கள் மோசடிப் பேர்வழிகளிடம் மொத்தமாக ரூ.1,000 கோடி இழந்து இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு நகரில் தீபாவளி நிதி நிறுவனம் என்ற பெயரில் சிலர் நிறுவனங்களைத் தொடங்கி ரூ.1,000 செலுத்தினால் ரூ.5,000க்குப் பொருள்கள் தருவதாக விளம்பரப்படுத்தினர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சொன்னபடியே அவர்கள் பொருள்களையும் விநியோகித்து வந்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து தவணைத் தொகையை ரூ.3,000 செலுத்தினால் தீபாவளிக்கு ரூ.15,000 மதிப்புள்ள பொருள்கள் கிடைக்கும் என்றும் ரூ.50,000 செலுத்தினால் இரண்டரை பவுன் தங்க நகையும் வெள்ளி நகைகளும் பாத்திரப் பண்டங்களும் இதர அன்பளிப்புப் பொருள்களும் வழங்கப்படும் என்றும் அந்த நிறுவனங்கள் பரபரப்பாக விளம்பரங்களை வெளியிட்டன.
அவற்றை நம்பி ஏராளமான மக்கள் போட்டிபோட்டுக் கொண்டு பணத்தைக் கட்டியதாகக் கூறப்படுகிறது.
சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதையும் சேர்ந்த ஏறக்குறைய 1 மில்லியன் பேர் ரூ.1,000 கோடி வரை அந்த மோசடிப்பேர்வழிகளிடம் கொடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், தீபாவளி நெருங்கி வந்ததை அடுத்து அந்த நிறுவனங்களும் அவற்றின் ஊழியர்களும் திடீரென சில நாள்களுக்கு முன் தலைமறைவாகிவிட்டனர்.
பணம் போட்டவர்கள் செய்வதறியாது தவித்து பொருளியல் குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் தாக்கல் செய்து இருப்பதாக தமிழக ஊடகங்கள் பரபரப்பாக செய்தி வெளியிட்டுள்ளன.

