கைப்பேசிச் சாதனங்கள் குறித்த 140 மோசடிச் சம்பவங்கள் தொடர்பில் இருவர் மீது நேற்று மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. மோசடிச் சம்பவங்களில் மொத்தம் $360,000க்கும் மேற்பட்ட தொகை கையாடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் டியோ ஜுன் ஹாவ், 23, சியூ ஷி சிங், 25 ஆகிய இருவரையும் மத்திய காவல் பிரிவில் தடுத்து வைக்குமாறு ஆணையிடப்பட்டது. அடுத்த மாதம் 2ஆம் தேதிக்கு இருவரின் வழக்கும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இணைய வர்த்தகத் தளமான 'கேரோசல்' வழி இருவரும் இவ்வாண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதிக்கும் செப்டம்பர் 28ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் வாடிக்கையாளர்களை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.
'ஐஃபோன் 14', 'ஐஃபோன் 13' கைப்பேசிகளை விற்பதாகக் கூறி இருவரும் வாடிக்கையாளர்களை ஏமாற்றிப் பணம் பறித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து காவலர்களுக்குப் புகார்கள் பல வந்ததாகக் கூறப்படுகிறது.
வர்த்தக விவகாரத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, ஏமாற்றியதாகக் கூறப்படுவோரின் அடையாளத்தைக் கண்டறிந்து சிங்கப்பூர் வந்த இருவரையும் சாங்கி விமான நிலையத்தில் கைதுசெய்தனர்.
இந்நிலையில், அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே பொருள்கள் வாங்குமாறு காவலர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

