கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை பகுதியில் ராஜேந்திர சோழன் கால கல்வெட்டுகளும் கல்தூண்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கிடைத்துள்ள சோழர் காலத்து கல்வெட்டுகளில் இதுதான் ஆக பழமையான கல்வெட்டு என அம்மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். கீழடியில் நடைபெற்ற அகழாய்வுப் பணியின்போது ஏராளமான அரிய பொருள்கள் கிடைத்தன.
இந்நிலையில், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மதகொண்டப்பள்ளி பகுதியில், மண்ணில் புதைந்திருந்த நான்கடி உயரம், ஒரு அடி விட்டம் கொண்ட நான்கு கல் தூண்களும் கல்வெட்டுகளும் தோண்டி எடுக்கப்பட்டன.
அவற்றுள் இரண்டு கல்வெட்டுகள் ராஜராஜ சோழன் மகன் ராஜேந்திர சோழன் காலத்தைச் சேர்ந்தவை எனத் தெரியவந்துள்ளது.
"அக்கல்வெட்டுகளில் முதலாம் ராஜேந்திர சோழனைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அச்சமயம் நடைபெற்ற சம்பவங்கள் குறித்த செய்திகளும் இடம்பெற்றுள்ளன," என்று கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

