கிருஷ்ணகிரி: பேருந்து வசதி இல்லாத காரணத்தால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சில சிற்றூர்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் நாள்தோறும் பள்ளியைச் சென்றடைய சுமார் எட்டு கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டி உள்ளதாக பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பீமாண்டப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஓட்டூர், பாறையூர், கொல்லப்பள்ளி, மாரிகவுண்டனூர், சோமநாதபுரம், கங்கசந்திரம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயம்தான் முக்கியத் தொழில்.
இக்கிராமங்களில் உள்ள மாணவர்களுக்காக தொடக்கப் பள்ளி மட்டுமே உள்ளது. ஆறு முதல் 12ஆம் வகுப்பு வரை கல்வி கற்க வேண்டுமானால் எட்டு கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள அரசுப் பள்ளிக்குச் செல்ல வேண்டும்.
ஆனால் அப்பள்ளிக்குச் செல்ல சாலை வசதி உள்ள போதிலும் பேருந்துகள் ஏதும் இயக்கப்படுவதில்லை. இதனால் ஓட்டூர், பாறையூர், கொல்லப்பள்ளி, மாரிகவுண்டனூர் ஆகிய நான்கு கிராமங்களைச் சேர்ந்த இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தினமும் எட்டு கிலோ மீட்டர் தூரம் நடந்தே பள்ளிக்குச் சென்று திரும்புகின்றனர். அவ்வாறு செல்லும் வழியில் குறுக்கிடும் மார்க்கண்டேய நதியையும் அவர்கள் கடக்க வேண்டியுள்ளது.
"மழைக் காலங்களில் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்லும்போது மாணவர்கள் அதைக் கடக்க அஞ்சுகின்றனர். இதனால் பள்ளிக்குச் செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. பேருந்து வசதி இல்லாததால் பல மாணவர்கள் மேல்நிலைக் கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது," என்று இக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

