சென்னை: தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களைத் தமிழக அரசு அமல்படுத்தி வருகிறது. அண்மையில்கூட உயர்கல்வி படிப்பதற்குத் தோதாக மாணவிகளுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 செலுத்தும் திட்டமும் தொடங்கியது.
'புதுமைப் பெண்' என்ற அத்திட்டத்தின் கீழ், மாணவிகள் பலனடையத் தொடங்கிவிட்டனர். என்றாலும்கூட கடந்த மூன்றாண்டு காலமாக நான்கு திருமண உதவித் திட்டங்களின்கீழ் அரசாங்கத்திடம் விண்ணப்பித்து இருக்கும் ஏறத்தாழ 30,000 பேர் இன்னமும் தங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று கவலை தெரிவிக்கிறார்கள்.
இவர்களுக்கு எட்டு கிராம் இலவச தங்கமும் ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை பண உதவி கிடைத்திருக்க வேண்டும் என்று அதிகாரபூர்வ தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன. கலப்பு மணம் செய்துகொண்ட 6,000 தம்பதியரும் இவர்களில் அடங்குவர்.
புதுமைப் பெண் உதவித் திட்டத்திற்கு 'மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்க்கல்வி உதவித் திட்டம்' என்றும் பெயர்.
அதன்படி, அரசுப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்துள்ள மாணவிகளுக்கு அவர்கள், பட்டப் படிப்பை அல்லது பட்டயப் படிப்பை முடிக்கும் வரை மாதாமாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது.
இதற்காக அரசாங்கம் ரூ.698 கோடியை இந்த ஆண்டு ஒதுக்கி இருக்கிறது. இதன்மூலம் 600,000க்கும் மேற்பட்ட மாணவிகள் பயன் அடைகிறார்கள்.
திமுக ஆட்சி பதவி ஏற்றப் பிறகு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் உயர் கல்வி உதவித் திட்டமாக மாற்றப்பட்டது. விதவைகளின் புதல்விகள், அனாதை சிறுமிகள், விதவைகள் மறுவாழ்வுத் திருமணம், கலப்புத் திருமணம் ஆகியவற்றுக்கு உதவியாக இதர நான்கு உதவித் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டன.
ஆனால், இத்திட்டத்தின்கீழ் தங்களுக்கு உதவி எதுவும் வரவில்லை என்று 30,000க்கும் மேற்பட்டவர்கள் தெரிவித்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, இது பற்றி கருத்து கூறிய சமூக நல்வாழ்வுத் துறை, மாதர் மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றுக்கான செயலாளர் சாம்பு கல்லோளிகர், இதற்காக ரூ.65 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கும் என்றும் விண்ணப்பதாரர்களுக்கு விரைவில் உதவி கிடைக்கும் என்றும் கூறினார்.

