ராமநாதபுரம்: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாள், குருபூஜை வரும் 30ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
அதை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் இந்த ஆண்டு 115வது தேவர் பிறந்த நாள் குருபூஜைகள் மிகச்சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் நடந்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்த உள்ளனர். 10,000 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
தடை செய்யப்பட்ட பகுதிகள், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் எல்லாம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
காவல்துறையின் உத்தரவுகளை மீறி செயல்படுபவர்கள் மீது கண்காணிப்புப் படச்சாதனங்கள் மூலம் ஆய்வு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பசும்பொன்னில் மூன்று ஆளில்லா வானூர்திகள், 92 நிரந் தர படச்சாதனங்கள் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுகின்றன.
இதனிடையே, உயர்நீதிமன்ற உத்தரவின்படி தேவருக்கு அணிவிக்கப்படும் தங்கக் கவசத்தை வங்கியில் இருந்து ராமநாதபுரம் வருவாய் அதிகாரி பெற்றுக்கொண்டார். நினைவிடத்தில் வழிபாடு செய்யப்பட்டு ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர், மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது.
அதையடுத்து அங்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை அதிகாரிகள் 24 மணி நேர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

