சென்னை: நயன்தாரா, விக்னேஷ் சிவனின் இரட்டைக் குழந்தைகள் பிறந்த மருத்துவமனையின் நிர்வாகத்திடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி தமிழக அரசு விளக்கம் கேட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அம்மருத்துவமனைக்கு 'சீல்' வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்ததில், வீதிமுறைகள் மீறப்பட்டதாக அண்மையில் ஒரு சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, தமிழக சுகாதாரத்துறை விசாரணைக் குழு ஒன்றை அமைத்து இந்த சர்ச்சை குறித்து விசாரணை மேற்கொண்டது. அதன் மூலம் விதிமீறல்கள் மீறப்படவில்லை எனத் தெரிய வந்ததாக சுகாதாரத்துறை அறிவித்தது.
இந்நிலையில், நயன்தாராவின் குடும்ப நல மருத்துவரின் ஆலோசனைப்படியே தங்கள் மருத்துவமனையில் இரு குழந்தைகள் பிறக்க அனுமதிக்கப்பட்டதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், நயன்தாரா, விக்னேஷ்சிவன் ஆகிய இருவரையும் பரிசோதனை செய்யாமலேயே அவர்களின் குடும்ப மருத்துவர் சொன்னதைக் கேட்டு மருத்துவமனை செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், வாடகைத்தாய் குறித்து உரிய விவரங்கள், ஆவணங்கள் இல்லாமல் பிரசவம் பார்க்கப்பட்டதாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது. இதையடுத்து, அந்த மருத்துவமனைக்கு சீல் வைக்க அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்றும் இதனால் மருத்துவமனை நிர்வாகத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

