சென்னை: பெண்கள் குறித்து தரக்குறைவாகப் பேசிய திமுக பேச்சாளருக்கு நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், சமூக ஊடகம் வழி திமுக பிரமுகரின் பேச்சுக்காக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி மன்னிப்பு கோரியுள்ளார்.
அண்மையில் சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக் பாஜகவைச் சேர்ந்த நடிகைகள் குஷ்பு சுந்தர், நமீதா, காயத்ரி ரகுராம், கௌதமி ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவதூறாகவும் தரக் குறைவாகவும் பேசியதாகப் புகார் எழுந்துள்ளது.
அவர் தரக்குறைவாகப் பேசியதை பொதுக்கூட்ட மேடையில் இருந்த திமுக நிர்வாகிகள் யாரும் கண்டிக்கவில்லை என்றும் ஆண்கள் பெண்களை தவறாகப் பேசுவது, அவர்கள் வளர்க்கப்பட்ட விதத்தையும், அவர்கள் வளர்ந்த மிக மோசமான சூழலையும் காட்டுகிறது என்றும் குஷ்பு தமது அண்மைய டுவிட்டர் பதிவு ஒன்றில் சாடி உள்ளார்.
"இதுபோன்ற ஆண்கள் ஒரு பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள். மேலும், தங்களை 'மறைந்த முதல்வர் கருணாநிதியைப் பின்பற்றுபவர்கள்' என்றும் அழைத்துக் கொள்கிறார்கள்.
"முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் இதுதான் புதிய திராவிட மாதிரியா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார் குஷ்பு.
இதையடுத்து டுவிட்டரிலேயே மன்னிப்பு கோரியுள்ளார் கனிமொழி. ஒரு பெண்ணாக திமுக பேச்சாளரின் பேச்சுக்காக தாம் மன்னிப்பு கேட்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
"இதை யார் செய்திருந்தாலும், சொன்ன இடம் அல்லது அவர்கள் சார்ந்த கட்சி எதுவாக இருந்தாலும், இது எக்காரணத்தைக் கொண்டும் சகித்துக்கொள்ள முடியாதது. இதற்காக என்னால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்க முடிகிறது.
"ஏனெனில் எனது தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் எனது கட்சியான திமுகவுக்கும் இது ஒருபோதும் ஏற்புடையதல்ல," என்று கனிமொழி தமது பதிவில் தெரிவித்துள்ளார்.
அவரது இந்தப் பதிலை, முதிர்ச்சியான செயல்பாடு என இணையவாசிகள் பலரும் வரவேற்றுள்ளனர். நடிகை குஷ்புவும் தன் பங்குக்கு கனிமொழியைப் பாராட்டி உள்ளார்.
"உங்களுடைய (கனிமொழி) நிலைப்பாட்டுக்கும் ஆதரவுக்கும் நன்றி. நீங்கள் எப்போதும் பெண்களின் மதிப்புக்கும் சுயமரியாதைக்காகவும் குரல் கொடுத்தவர்," என்று கூறியுள்ளார் குஷ்பு.

