கைதானோர் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மீண்டும் சோதனை
கோவை: கோவை கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக அடுத்தடுத்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், முக்கிய குற்றவாளி எனக் கருதப்படும் முபினுடன் தொடர்புடைய 15 பேருக்கு புலனாய்வு அதிகாரிகள் வலைவீசி உள்ளனர்.
அவர்கள் ஏதேனும் சதிச் செயல் களை அரங்கேற்ற திட்டமிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த 23ஆம் தேதி நிகழ்ந்த கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக இதுவரை ஆறு பேர் கைதாகி உள்ளனர். அவர்களில் ஐந்து பேரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஐந்து பேரின் வீடுகளிலும் காவல்துறை நேற்று மீண்டும் சோதனை நடவடிக்கை மேற்கொண்டது.
இதற்கிடையே, தமிழக அரசு பரிந்துரை செய்ததை அடுத்து இந்த வழக்கின் விசாரணை மத்திய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சு பிறப்பித்தது.
நேற்று முன்தினம் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் உள்ள மத போதகரான முகம்மது உசேன் (41 வயது) என்பவரிடம் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது மடிக்கணினி, கைப்பேசிகள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதே பகுதியைச் சேர்ந்த மேலும் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் தெரிகிறது.
முன்னதாக இந்த வழக்கை விசாரிக்கும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுடன் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு ஆலோசனை மேற்கொண்டார். அப்போது தமிழக காவல்துறை சேகரித்துள்ள அனைத்து தகவல்களும் ஒப்படைக்கப்படும் என அவர்களிடம் உறுதியளித்தார்.
இதற்கிடையே, கோவை கார் வெடிப்பு சம்பவத்தை அடுத்து தமிழக பாஜக நிர்வாகிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அக்கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையே, கார் வெடிப்பு சம்பவத்தில் வெளிநாட்டில் இயங்கும் பயங்கரவாத குழுக்களுக்கு தொடர்பு உள்ளதா என்று புலனாய்வு முகமை சந்தேகிக்கிறது. குறிப்பாக இலங்கையில் நிகழ்ந்த ஈஸ்டர் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய வெளிநாட்டு பயங்கரவாதக் குழு, கோவையிலும் தன் கைவரிசையைக் காட்ட முயன்றதா என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
கோவையில் சாலைகளில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

