ரூ.82.5 லட்சம் மதிப்புடைய தங்கப் பசை, தங்கச் சங்கிலிகள் பறிமுதல்
சென்னை: துபாயிலிருந்து விமானங்களில் கடத்தி கொண்டுவரப்பட்ட ரூ.82.5 லட்சம் மதிப்பிலான 1.85 கிலோ தங்கப் பசை, தங்கச் சங்கிலிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையைச் சேர்ந்த இரு பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏழு மீனவர்கள், 98 படகுகளை மீட்க ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
ெசன்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ஏழு தமிழக மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ஏற்கெனவே 98 மீனவர்களின் படகுகள் இலங்கை வசம் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால், ஏழை மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின், இந்திய மீனவர்களின் பாதுகாப்புக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வருவதாகவும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜெய்சங்கருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக பசும்பொன் கிராமப் பயணம் ரத்து
சென்னை: சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் உடல் சோர்வு காரணமாக நேற்று முன்தினம் இரவு 7.30 மணி அளவில் முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டு மூன்று மணி நேரத்தில் வீடு திரும்பினார். முதல்வர் ஸ்டாலின் முதுகுவலிக்காக வழக்கமான பரிசோதனைகளைச் செய்துகொண்டதாக ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115வது பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வதற்காக இன்று கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்திற்குச் செல்லவிருந்த ஸ்டாலின், உடல்நலக்குறைவு காரணமாகத் தன் பயணத்தை ரத்து செய்துவிட்டார்.
விவசாயிகள் கோரிக்கை ஏற்பு; நெல் ஈரப்பதம் 19% ஆக அதிகரிப்பு
சென்னை: டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால் நெல்லின் ஈரப்பதம் அதிகரித்ததை அடுத்து, நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17 விழுக்காடு என்பதை 22 விழுக்காடாக அதிகரிக்கும்படி மத்திய அரசிடம் தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து, இந்திய உணவுக் கழகத் தரக் கட்டுப்பாட்டுக் குழுவினர் டெல்டா மாவட்டங்களில் நெல் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்து, ஈரப்பத அளவை உயர்த்துவதற்கு பரிந்துரைத்து மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். அதன்படி, நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17ல் இருந்து 19 விழுக்காடாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.
சர்தார் வல்லபாய் பட்டேல் கண்காட்சி
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் உள்நாட்டு முனையம் வருகைப் பகுதியில் சர்தார் வல்லபாய் பட்டேல் வாழ்க்கை வரலாறு கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது.
இக்கண்காட்சியை மத்திய அமைச்சர் வி.கே.சிங் தொடங்கி வைத்தார். ஒரு வாரம் நடக்கும் இந்தக் கண்காட்சியை விமானப் பயணிகள் பார்க்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். படம்: தமிழக ஊடகம்
மின்தூக்கியில் சிக்கியவர்கள் மீட்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் பழுது காரணமாக மின்தூக்கியில் சிக்கிய ஊழியர்களை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். ஒரு மணி நேரம் சிக்கித் தவித்த நிலையில், மீட்கப்பட்டனர்.

