சிவகங்கை: சுதந்திரப் போராட்ட வீரரும் ஆன்மிகவாதியுமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115வது பிறந்தநாள் விழா, 60வது குருபூஜை விழா நேற்று மாநிலம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே, பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்துவதற்காக அரசியல் பிரமுகர்கள் பலரும் வருகை தந்தனர்.
இதுபோல் வந்துகொண்டிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்களின் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர்தப்பினர்.
சிவகங்கையிலிருந்து மானாமதுரை நெடுஞ்சாலையில் முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர், பாஸ்கரன் உள்ளிட்டோர் பசும்பொன் பகுதியை நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது, கார் ஒன்று எதிர்பாராதவிதமாக குறுக்கே வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் முன்னாள் சென்ற கார் திடீரென 'பிரேக்' பிடித்ததால் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் கார்கள் வரிசையாக ஒன்றின் மேல் ஒன்று மோதின. இதில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் காயமின்றித் தப்பினர்.
உடன் வந்த அதிமுக நிர்வாகிகள் மணிகண்டன், ஜோதிபாசு, கல்யாணசுந்தரம், மதியழகன், தமிழ்ச்செல்வன் ஆகிய ஐந்து பேர் பலத்த காயமுற்று, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், அதிமுக முன்னாள் அமைச்சர்களின் கார்கள் உட்பட ஆறு கார்கள் சேதமடைந்தன.
இவ்விழாவை ஒட்டி தேவரின் நினைவிடம் அமைந்துள்ள பசும்பொன்னிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் 10,000 காவலர்கள் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப் பட்டிருந்தனர்.
அப்பகுதியில் ஆளில்லா வான்கலன்கள் பறக்கவும் தடை விதித்து காண்காணிப்புப் பணியில் காவலர்கள் ஈடுபட்டனர்.
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு திமுக சார்பில் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, அன்பில் மகேஷ் உள்ளிட்ட அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல் அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மானாமதுரை-சிவகங்கை நெடுஞ்சாலையில் வைகை ஆற்றுப் பாலத்தைக் கடக்கும்போது முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அறுவரின் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிநின்றன. படம்: ஊடகம்

