திருச்சி: அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்குத் தொடர்பில் 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
2012ஆம் ஆண்டு ராமஜெயம் நடைப்பயிற்சி சென்றபோது படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி கல்லணை சாலையில் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தக் கொலை வழக்கை ஜெயக்குமார் தலைமையிலான சிறப்புப் புலன் விசாரணைக் குழு விசாரித்து வருகிறது.
தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் தொடர்புடைய முக்கியக் கொலைக் குற்றவாளிகள், குண்டர்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், முக்கியத் துப்பு கிடைத்துள்ளதாக காவலர்கள் இப்போது தெரிவித்துள்ளனர்.
இதனால் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடித்துள்ளது.
கொலை தொடர்பாக சந்தேகப்படும் 12 பேரை அடையாளம் கண்டு அவர்களிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.
சாமி ரவி, மோகன் ராம், கணேசன், சத்தியராஜ், மாரிமுத்து, தினேஷ், சிவா, திலீப், தென்கோவன், ராஜ்குமார், சுரேந்தர், கலைவாணன் ஆகிய 12 பேரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த இன்று காலை முன்னிலையாகுமாறு திருச்சி நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
இதனால் விரைவில் ராமஜெயம் கொலை வழக்கில் முக்கிய குற்ற வாளிகள் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

