சென்னை: தமிழகம், புதுவையில் வடகிழக்குப் பருவமழை நேற்று முன்தினம் தொடங்கியதை அடுத்து, மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
திடீரென கனமழை காரணமாக தலைநகர் சென்னையில் வெள்ள அபாயம் உருவானால் அதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னையில் வடகிழக்குப் பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள தயார்நிலையில் இருப்ப தாகவும் வெள்ளத்தால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள 196 இடங்கள் அடையாளம் காணப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டு உள்ளதாகவும் தீயணைப்பு, மீட்புப்படை டிஜிபி ரவி கூறியுள்ளார்.
மீட்புப்பணியில் 898 தீயணைப்பு வீரர்கள், பயிற்சி பெற்ற 250 தன்னார்வலர்கள் ஈடுபடத் தயாராக இருப்பதாகவும் அவர் சொன்னார்.
இந்நிலையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாலைகளில் உள்ள பள்ளங்களைச் சீரமைக்கும் பணிகளில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். சாலைகளில் குண்டும் குழியுமாக இருந்த 4,822 பள்ளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
இதனிடையே, மாநிலம் எங்கும் மழையால் பாதித்துள்ள பகுதிகளில் மருத்துவ முகாம்களைத் தொடர்ந்து நடத்தவும் அனைத்து மருத்துவ மனைகளிலும் சித்த மருத்துவர்கள் மூலமாக பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கவும் பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் அறிவுறுத்தி உள்ளார்.

