கன்னியாகுமரி: தன் ஜாதகப்படி முதல் கணவன் உயிரிழப்பான் என்றும் இரண்டாவது கணவருடன் மட்டுமே சேர்ந்து வாழமுடியும் என்றும் ஒரு சோதிடர் சொன்னதை நம்பி, தன் காதலனுக்கு நஞ்சு கலந்த குளிர்பானத்தைக் கொடுத்து ஒரு பெண் கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், பாறசாலை முறியன்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஷாரோன்ராஜ், 23. இவர், குமரியில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ. இரண்டாமாண்டு படித்து வந்தவர், களியக்காவிளையை அடுத்த ராமவர்மன்சிறை பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா, 22, என்ற பெண்ணைக் காதலித்து வந்தார்.
இருவரும் பல்வேறு இடங்களிலும் சுற்றி வந்த நிலையில், கடந்த மாதம் 14ஆம் தேதி ஷாரோன்ராஜ் நண்பர் ஒருவருடன் கிரீஷ்மா வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அங்கிருந்து திரும்பி வந்தவர் வயிறு வலிப்பதாக நண்பரிடம் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, பாறசாலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஷாரோன்ராஜ் உயிரிழந்தார்.
இதுகுறித்து, ஷாரோன்ராஜின் பெற்றோர் பாறசாலை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அதில் தனது மகன் ஷாரோன்ராஜை அவரது காதலி குடும்பத்தினர் திட்டமிட்டுக் கொன்றுவிட்டதாகக் குற்றம்சாட்டியிருந்தனர்.
அதன்பிறகு, இவ்வழக்கு கேரள காவல்துறைக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், ஷாரோன்ராஜின் காதலி கிரீஷ்மா, அவரது பெற்றோர் உட்பட நால்வரிடம் திருவனந்தபுரம் குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
கிரீஷ்மா, பல திடுக்கிடும் தகவல்களைக் கூறினார்.
தான் ஷாரோன்ராஜைக் காதலித்து வந்த நிலையில், தன் பெற்றோர் ராணுவ வீரர் ஒருவருடன் அவருக்கு நிச்சயதார்த்தம் செய்து வைத்துள்ளனர்.
இதனையறிந்த ஷாரோன்ராஜ் கிரீஷ்மாவிடம் தன்னை ஏமாற்றிவிட்டாயே என வேதனைப்பட்டுள்ளார். குடும்பச் சூழ்நிலை காரணமாக திருமணத்துக்கு ஒப்புக் கொண்டதாக கிரீஷ்மா, ஷாரோன்ராஜிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திருமணத்திற்கு இடைஞ்சலாக ஷாரோன்ராஜ் வரலாம் என்ற சந்தேகத்தில் ஷாரோன்ராஜை வீட்டுக்கு வரவழைத்து குளிர்பானத்தில் ரப்பர் மரத்துக்கு அடிக்கும் நஞ்சை கலந்துகொடுத்து கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ள கிரீஷ்மா கைதானார்.
இதனிடையே, காவல்நிலை யத்தில் உள்ள கழிவறை சுத்திகரிப் பானைக் குடித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற கிரீஷ்மா திரு வனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

