கும்பகோணம்: கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரன் கோயிலில் மங்களம் என்ற 56 வயது யானை உள்ளது. இதனை பாகன் அசோக் குமார், 50, பராமரித்து வருகிறார்.
வெள்ளிக்கிழமைகளில் அங் குள்ள அம்மன் முன் மங்களம் மண்டியிட்டு வணங்குவதைக் காண பக்தர்கள் திரள்வர்.
இந்நிலையில், அண்மையில் பாகன் அசோக்குமார் யானையின் அருகில் அமர்ந்து கைப்பேசியைப் பார்த்துக்கொண்டிருந்தார். தன்னைக் கவனிக்காமல் அப்படி அவர் கைப்பேசியில் என்ன கவனிக்கிறார் என்பதை மங்களம் குனிந்து பார்த்து, குரல் எழுப்பி அவருடன் விளையாடியது.
இதனைக் காணொளி எடுத்த பக்தர் ஒருவர் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அசோக்குமார் கூறுகையில், "நான் பள்ளிப் பருவம் முதலே மங்களத்துடன் பழகி வருகிறேன். பல சமயம் பள்ளிக்குக்கூட செல்லாமல் மங்களத்தை நீராட வைத்து அலங்கரித்துள் ளேன். அதுமுதல் மங்களம் என் உயிர் நண்பனாகப் பழகிவருகிறது.
"என்னை அவ்வப்போது தன் கால்களுக்கு இடையில் வைத்துக்கொண்டு கொஞ்சும். வெளியூர் செல்லும்போது அதனிடம் கூறிவிட்டுத்தான் செல்வேன். மீண்டும் வரும்போது என்னை உச்சிமுகர்ந்து, பாசத்தை வெளிக்காட்டும்," என்றார். இந்த யானையை 1982ல் காஞ்சி மகா பெரியவர் வழங்கி உள்ளார்.
பாகனின் கைப்பேசியைக் குனிந்து கவனிக்கும் மங்களம் (இடது), பாகனை கால்களால் மறித்து விளையாடுகிறது. படம்: ஊடகம்