சென்னை: மியன்மாரில் நல்ல வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் சென்று, அங்குள்ள சட்டவிரோதக் கும்பலிடம் சிக்கித் தவித்து வந்த எட்டுப் பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்களைச் சென்னை அனைத் துலக விமான நிலையத்தில் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்று, சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்தார்.
தகவல் தொழில்நுட்பத் துறை யில் வேலை, கைநிறைய சம்பளம், சொகுசு வாழ்க்கை வாழலாம் என்று முகவர்கள் கூறிய ஆசைவார்த்தை களை நம்பி லட்சக்கணக்கில் பணத்தைக் கட்டிவிட்டு தாய்லாந்து, மியன்மார் ஆகிய நாடுகளுக்கு தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் 300 பேர் வேலைக்குச் சென்றனர்.
ஆனால், அவர்கள் எதிர்பார்த்த படி அங்கு சரியான வேலையும் சம்பளமும் கிடைக்காமல், அங்குள்ள சட்டவிரோத மோசடிக் கும்பலிடம் சிக்கித் திண்டாடி வந்தனர்.
இதைத்தொடர்ந்து, அண்மையில் முதற்கட்டமாக 18 தமிழர்கள் மீட்கப்பட்டனர்.
இப்போது இரண்டாம் கட்டமாக தீபா மணி, விக்னேஷ், ராகுல், சிகரன், முஹிசின், மகேஷ், பாலகோபி, முகமது பைதீன் ஆகிய எட்டுப் பேரும் மியன்மாரில் இருந்து மீட்கப்பட்டு தாய்லாந்து வழியாக சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறுகையில், "தவறான வகையில் வழிகாட்டும் முகவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 10 நாள்களுக்கு முன்பு தந்த புகார்களின் அடிப்படையில் திருச்சியைச் சேர்ந்த இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
"இதுவரையில் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 600 பேரை மீட்டு தமிழகத்துக்கு அழைத்து வந்துள் ளோம். அவர்களது தகுதியின் அடிப்படையில் அரசு வேலை கொடுக்கும் வாய்ப்பு நிச்சயம் உள்ளது," என்றார்.