சென்னை: தமிழகத்தில் திருவள்ளூா், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று 32 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழையினால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இதனால் அவர்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சென்னை, காஞ்சி, திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் சிவ கங்கை, நாமக்கல், கரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் நேற்றும் இன்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளனர்.
அதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே வடகிழக்குப் பருவமழை வேகமெடுக்கத் தொடங்கிஉள்ளது. இதன் காரணமாக கடலோர, டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
சென்னையில் பலத்த காற்றுடன் விட்டுவிட்டு கனமழை பெய்ததால் முக்கியச்யி சாலைகளில் எல்லாம் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
நகரின் சில பகுதிகளில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டதால் பணி முடிந்து வீடு திரும்பியவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
நள்ளிரவில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
கனமழை பாதிப்பை எதிர்கொள்ளத் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் தயாராகி வருகின்றன.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றுள்ளதால் 13ஆம் தேதி வரை தமிழகத்தில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழகம், புதுவை, காரைக்காலில் அடுத்த மூன்று நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலூர், டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் மிக கனமழை பெய்யும்," எனத் தெரிவித்தார்.

