மதுரை: மதுரை விமான நிலையத்துக்கு வந்த பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி, அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ராமசந்திரன், தங்கம் தென்னரசு, பி.மூர்த்தி உட்பட பலர் வரவேற்றனர். பாஜக சார்பில் கட்சியின் மேலிட பார்வையாளர் சுதாகர் ரெட்டி, எச். ராஜா, முருகானந்தம் ஆகியோர் வரவேற்றனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடியை வரவேற்க எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது அணியை சேர்ந்த ராஜன் செல்லப்பா, உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
அதேபோல ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஐவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இரு அணியினரும் நேற்று மதுரை விமான நிலையத்துக்கு வந்தனர். அருகருகே இருந்தாலும் எடப்பாடி பழனிசாமியும் ஓ. பன்னீர் செல்வமும் அதிகாரிகளுக்கு இடையே தள்ளி நின்றுகொண்டிருந்தனர்.
இதைக் கண்ட பிரதமர் மோடி தனித்தனியாக நின்ற எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சேர்ந்து வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து வேறு வழியில்லாமல் இருவரும் சேர்ந்து பிரதமர் மோடியை வரவேற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி தங்களை அழைத்துப் பேசுவார் என்ற நம்பிக் கையுடன் இரு அணிகளும் காத்துக் கிடந்தன. ஆனால், யாரையும் சந்திக்காமல் பிரதமர் மோடி திரும்பிவிட்டார். இதன் மூலம் இரு அணிகளும் சேர்ந்து இருக்க வேண்டும் என்பதை பிரதமர் மோடி குறிப்பால் உணர்த்தி சென்றிருக்கலாம் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

