சென்னை: மலேசிய நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் மாதந்தோறும் கணிசமான தொகை லாபமாக கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் கூறி மோசடி செய்த ஆயுதப்படை காவலர் கைதாகி உள்ளார்.
சென்னையின் புறநகர்ப் பகுதியான ஆவடியில் ஆயுதப்படைப் பிரிவில் காவலராகப் பணியாற்றி வருகிறார் தர்மன்.
31 வயதான இவர் தமது நண்பர் மூலம் ஆயுதப்படையில் பணியாற்றும் பூம்பாண்டி என்பவரிடம் பண முதலீடுகள் குறித்து அண்மையில் பேசியுள்ளார்.
அப்போது மலேசியாவில் உள்ள எண்ணெய் நிறுவனம் ஒன்றில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதந்தோறும் 15 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதை நம்பிய பூம்பாண்டி, ரூ.5 லட்சம் கொடுக்க, அவருக்கு மாதந்தோறும் ரூ.75 ஆயிரத்தை கொடுத்து வந்துள்ளார் தர்மன். இதனால் இந்த முதலீடு நூறு விழுக்காடு லாபகரமானது என்று நம்பிய பூம்பாண்டி, தனக்குத் தெரிந்த பலரிடம் பணம் வசூலித்து, அதை மலேசிய நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறு கூறி, தர்மனிடம் ஒப்படைத்தார்.
மொத்தம் ரூ.1.44 கோடி தொகையை அவர் அளித்ததாகத் தெரிகிறது. ஆனால் புதிதாக முதலீடு செய்த யாருக்குமே மாதாந்திர லாபத் தொகை ஏதும் வரவில்லை.
இதுகுறித்து தர்மனிடம் கேட்டபோது, அவர் உரிய பதில் அளிக்கவில்லை. இதனால் அவர் மீது பூம்பாண்டி உள்ளிட்ட 16 பேர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் தர்மன் கைதாகி உள்ளார்.
அவருக்கு இந்த மோசடியில் உடந்தையாக இருந்த மூன்று பேருக்கு வலைவீசப்பட்டுள்ளது.

