மதுரை: முல்லைப் பெரியாறு அணை குறித்து அவதூறு பரப்பும் வகையில் வெளியாகி உள்ள குறும்படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என தமிழகத்தில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
'சேவ் கேரளா பிரிகேட்' என்ற அமைப்பு தற்போது 'பெரியாறு - தி பிளீடிங் ரிவர்' என்ற தலைப்பில் குறும்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் இடம்பெற்று உள்ளதாக தமிழக விவசாயிகள் கூறுகின்றனர்.
இதையடுத்து, ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினர், அக்குறும்படத்தை எதிர்த்து சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர்.
"கேரளாவில் வழக்கறிஞர் ரசல் ஜோய் என்பவர் 'சேவ் கேரளா பிரிகேட்' என்ற அமைப்பை தொடங்கி, பெரியாறு அணைக்கு எதிராக பிரசாரம் நடத்தி வருகிறார்.
"முல்லைப் பெரியாறு அணைக்கு 142 அடி தண்ணீரை தாங்கக்கூடிய சக்தி இல்லை. அணை உடைந்தால் கேரளாவில் ஐந்து மாவட்டங்கள் அழியும், 50 லட்சம் மக்கள் இறப்பார்கள் என கேரளா முழுவதும் இந்த அமைப்பு பொய் பிரசாரம் செய்தும் போராட்டங்கள் நடத்தியும் வருகிறது," என பெரியாறு வைகை பாசன விவசாய சங்கம் சாடி உள்ளது.
கடந்த ஜூலை மாதம் கேரள அமைப்பினர் பெரியாறு அணை குறித்து ஆவணப்படம் எடுக்க சமூக ஊடகங்கள் மூலம் நன்கொடை பெற்றதாகக் குறிப்பிட்டுள்ள தமிழக விவசாயிகள், 17 நிமிடம் ஓடக்கூடிய குறும்படத்தால் இரு மாநிலங்களுக்கு இடையேயான உறவு பாதிக்கப்படும் எனச் சுட்டிக்காட்டி உள்ளனர்.
"எனவே 'பெரியாறு' குறும்படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.
"பிரிவினையைத் தூண்டும் ரசல் ஜோய் உள்ளிட்டவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்," என பெரியாறு வைகை பாசன விவசாய சங்கம் அறிக்கை வழி வலியுறுத்தி உள்ளது.

