நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை காவல்துறையின் சிபிசிஐடி பிரிவு உதகை நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக 316 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் 3,600 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
காலஞ்சென்ற முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களா, எஸ்டேட் ஆகியன நீலகிரியில் உள்ள கோடநாடு பகுதியில் உள்ளன.
கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இந்த பங்களாவில் நிகழ்ந்த கொலை, கொள்ளைச் சம்பவங்கள் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தின.
இதுகுறித்து தனிப்படையினர் விசாரித்து வந்த நிலையில், சில புகார்கள் எழுந்ததன் காரணமாக பின்னர் சிபிசிஐடி பிரிவிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது.
அதன் பின்னர் விசாரணை சூடுபிடித்தது. ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி ஆகியோரிடம் விசாரணை நடந்தது.
சசிகலாவிடம் மட்டும் 30 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் 280 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
சந்தேக வளையத்தில் உள்ளவர், சாட்சிகள் என கடந்த பல மாதங்களாக 316 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டன. அவற்றின் அடிப்படையில் விசாரணை தயாராகி உள்ளது.
கோடநாடு வழக்கு விசாரணை சரியாக நடைபெறவில்லை என திமுக குற்றம்சாட்டி இருந்தது. பல முக்கியத் தகவல்கள் மறைக்கப்பட்டதாகவும் அப்போதைய அதிமுக அரசை சாடியது. அதன் காரணமாகவே சிபிசிஐடி பிரிவிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. இப்போது விசாரணை அறிக்கையும் தயாராகி உள்ளது.

