சென்னை: தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் இரண்டாவது நாளாக நேற்று பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
2008ஆம் ஆண்டில் மும்பை கடல் வழியாகப் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் ஆண்டுக்கு இரண்டு முறை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை முதல் கன்னியா குமரி வரையில் உள்ள 13 கடலோர மாவட்டங்களில் நடைபெற்று வரும் பாதுகாப்பு ஒத்திகையில் 5,000க்கும் மேற்பட்ட கடலோரப் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம் கடலோரப் பகுதிகளில் 2வது நாளாக பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
கடலோர மாவட்டங்களில் நடந்த பாவனைப் பயிற்சியில் பயங்கர வாதிகள்போல ஊடுருவியவர்களை பல இடங்களில் காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.
சில பகுதிகளில் ஊடுருவியவர்களை அவர்கள் பிடிக்கத் தவறினர். இறுதி நாளான நேற்று கடலோரப் பாதுகாப்புப் படையினருடன் சுங்கத் துறையினரும் இணைந்து ஒத்திகையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கடலோரப் பகுதி கள் அனைத்தும் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கன்னியாகுமரி கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தின் காவல் அதிகாரிகள், இரண்டு அதிநவீன சுற்றுக்காவல் படகுகள் மூலம் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். சின்னமுட்டம், பஞ்சலிங்கபுரம், மகாதானபுரம், தேங்காய்பட்டணம், கூடங்குளம் உட்பட 10 இடங்களில் உள்ள கடலோரப் பாதுகாப்பு குழும காவல்துறைக்குச் சொந்தமான சாவடிகளில் சோதனை நடத்தப்பட்டது.
அந்த சமயத்தில் தப்பிச் செல்ல முயற்சி செய்த பயங்கரவாதிகள்போல நடித்த நால்வரை கடலோரப் பாதுகாப்பு குழும காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். அடுத்த ஆண்டும் இந்த ஒத்திகை நடை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

