செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
2f7edbee-3a53-4aa4-81d1-623ee5e5e400
-

சாலையில் முகாமிட்ட யானைகள்; வாகனவோட்டிகள் அவதி

நீலகிரி: நீலகிரி மலைச்சாலையில் சென்ற காரை மறித்து யானை துரத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சுற்றுலாத் தலமான உதகை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மலைச் சாலைகளில் யானைகள் குறுக்கிடுவது அதிகரித்து வருகிறது. மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் மலைச்சாலையில் சென்ற காரை யானை துரத்தியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும், வாகன ஓட்டி சுதாரித்துக்கொண்டு காரை பின்னோக்கி இயக்கியதால் பயணிகள் தப்பித்தனர். நீண்ட நேரமாக யானைகள் முகாமிட்டிருந்தால் அவதியடைந்த பயணிகள், சாலையில் யானைகள் குறுக்கிடாதவாறு வனத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

'எடப்பாடியுடன் கூட்டணி என எங்கும் சொன்னதில்லை'

சென்னை: "எடப்பாடி பழனிசாமியுடன் அமமுக கூட்டணி அமைக்கத் தயார் என்று நான் எங்கும் சொன்னதில்லை. அதிமுகவில் இணைய அரைக்கால் விழுக்காடுகூட வாய்ப்பில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அல்லது பாஜகவுடன்தான் கூட்டணி அமைப்போம்," என்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

பச்சை நிறமாக மாறிய கடல் நீரில் செத்து மிதந்த மீன்கள்

குளச்சல்: குமரி மாவட்டம், குளச்சல் பகுதியில் நேற்று வழக்கத்திற்கு மாறாக கடலின் அலையில் சீற்றம் தெரிந்தது. அத்துடன், கடல் நீரும் கடல் அலைகளும் பச்சை நிறத்தில் காணப்பட்டன. இதையறிந்த மீனவர்கள் கடற்கரைக்கு திரண்டனர். அலைகள் கரைக்கு வந்தபோது பச்சை நிறமாக நுரை பொங்கி வந்தன. தண்ணீரில் துர்நாற்றமும் வீசியது.

எனினும், கடல்நீரின் நிற மாற்றத்திற்கான காரணம் தெரியவில்லை. கடல் நீர் பச்சை நிறமாக மாற பூங்கோரைப் பாசிகள்தான் காரணமா? அல்லது வேறு எதுவும் வேதிக் கழிவுகள் கலந்தது காரணமா? என சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து, கடல் நீர் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்தபிறகுதான் உண்மை நிலவரம் தெரியவரும். படம்: தமிழக ஊடகம்

10 பேருக்கு சொந்த நிதியில் மிதிவண்டி வழங்கிய தலைமை ஆசிரியை

ராமநாதபுரம்: ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் 10 பேருக்கு தலைமை ஆசிரியை ஒருவர் மிதிவண்டிகளை வழங்கி ஊக்கப்படுத்தி உள்ளார். அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை ஊக்கப்படுத்தும் நோக்கில் ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியை சற்பிரசாத மேரி தன் சொந்த நிதியில் இருந்து 10 பேருக்கு மிதிவண்டிகளை வழங்கியுள்ளார்.