மயிலாடுதுறை: நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் விசுவாசிகள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்றும் அவ்வாறு செய்தால் தேர்தலில் எளிதில் வெற்றி பெறலாம் என்றும் டிடிவி தினகரன் (படம்) தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச் செயலாளரான அவர், இரட்டை இலை சின்னம் இல்லாமல் எடப்பாடி பழனிசாமியால் எதுவும் செய்ய முடியாது என்றார்.
மயிலாடுதுறையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வத்தையே பழனிசாமி கட்சியை விட்டு நீக்கியதை ஏற்க இயலாது என்றார்.
"காலஞ்சென்ற முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருவரும் இரட்டை இலை என்ற வெற்றிச் சின்னத்தை மக்கள் மனதில் பதிய வைத்தனர்.
அந்தச் சின்னத்தை வைத்துக் கொண்டுதான் எடப்பாடி பழனிசாமி அதிமுக கட்சித் தொண்டர்களையும் தமிழக மக்களையும் ஏமாற்றி வந்தார். அந்தச் சின்னம் இல்லை என்றால் அவரது கதி என்னவாகும் என்பது எல்லாருக்கும் தெரியும்.
"பழனிசாமியால் அவரது சொந்த ஊரில்கூட உள்ளாட்சி அமைப்புத் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை," என்றார் தினகரன்.
அரசு நல்லது செய்தால் வரவேற்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், காற்பந்து வீராங்கனை பிரியாவின் மரணம் தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மன நிறைவு அளிப்பதாகத் தெரிவித்தார்.
இவ்வாறு தாம் கருத்துரைப்பதால், திமுக கூட்டணியில் அமமுக இணையும் என எதிர்பார்க்க வேண்டாம் என்றார்.
"அரசியலில் எனது உயரம் என்ன என எனக்கு நன்றாகத் தெரியும். எனவே அதற்கேற்பத்தான் எனது செயல்பாடுகளும் அமையும்," என்றார் டிடிவி தினகரன்.
முன்பு ஜெயலலிதாவும் ஜானகி அம்மாளும் தனித்தனியாக போட்டியிட்ட நிலையில், அதிமுக ஆட்சிக்கு வர முடியாமல் போனதால் ஜானகி அம்மாள் விட்டுக்கொடுத்ததாகக் குறிப்பிட்ட அவர், அதன் பிறகுதான் அதிமுக வெற்றி பெறத் தொடங்கியது என்றார்.
"அதேபோல் இப்போது அனைவரும் ஒன்றாக இணைந்தால்தான் வெற்றி பெற முடியும்.
"எதிர்வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்றால் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஒரே அணியில் திரண்டால்தான் முடியும்.
"இதற்காக அனைவரும் ஒரே கட்சியில் இருந்து பணியாற்ற வேண்டும் எனும் அவசியம் எழவில்லை. தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்தால்தான் திமுகவை வெல்ல முடியும்.
"மக்களுக்கு திமுக மீது நிறைய மனக்குறைகள் உள்ளன," என்றார் டிடிவி தினகரன்.
தமிழகத்திற்குத் தேவையான திட்டங்கள் கிடைக்க வேண்டும் என்றால், அதற்கேற்ற பிரதமரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்ட அவர், அதற்கும் முன்னதாக கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
ஒருவேளை எந்தக் கூட்டணியும் சரிவர அமையவில்லை என்றால் அமமுக தனித்து போட்டியிடக்கூடிய துணிச்சல் மிகுந்த கட்சி என்றும் அவர் தெரிவித்தார்.
தினகரன் இவ்வாறு பேசி இருப்பதன் மூலம் அவர் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க எந்தவித நிபந்தனையும் இன்றி முன்வருவார் என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
ஆனால் அப்படி எல்லாம் அவர் கூட்டணி வைக்கமாட்டார் என அவரது ஆதரவாளர்களில் ஒரு தரப்பினர் அடித்துக் கூறி வருகின்றனர்.
'ஓரணியில் திரண்டால் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி உறுதி'

