சென்னை: சிலை கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை சென்னை காவல்துறை கைது செய்தது. பிடிபட்ட ஆடவர், இரண்டு சிலைகளை கைமாற்றிவிட பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது பிடிபட்டார்.
நேற்று முன்தினம் சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில், இரு ஆடவர்கள் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நீண்ட நேரம் நின்றுகொண்டிருந்தனர்.
இதையடுத்து விசாரிக்க முடிவு செய்து, காவல்துறையினர் அருகில் சென்றபோது, அவ்விரு ஆடவர்களும் தப்பியோட முயன்றனர்.
ஒருவர் வேகமாக தப்பியோடிவிட, மற்றொருவர் பிடிப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, இரு சிலைகளைக் கைமாற்றிவிட தாம் காத்திருந்ததாகத் தெரிவித்தார்.
அவர் வைத்திருந்த ஒரு பையில் பெரிய ஐம்பொன் சிலை ஒன்றும் 300 கிராம் எடைகொண்ட பெருமாள் சிலையும் காணப்பட்டன.
புழக்கத்தில் இல்லாத ஒரு ரூபாய் நோட்டை காண்பித்தால், ஒரு நபர் மூன்று லட்சம் ரூபாய் கொடுத்து அவ்விரு சிலைகளையும் பெற்றுச் செல்வார் என்று தம்மிடம் கூறப்பட்டதாக பிடிபட்டவர் தெரிவித்தார்.
மேலும் திருச்சியைச் சேர்ந்த ஒரு பெண்தான் தம்மிடம் சிலைகளைக் கொடுத்து அனுப்பி வைத்ததாகவும் சுதாகர் என்ற அந்த ஆடவர் விசாரணையின்போது விவரித்தார். தப்பியோடிய ஆடவருக்கு வலைவீசப்பட்டுள்ள நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளின் உண்மையான மதிப்பு, அவை எங்கிருந்து திருடப்பட்டன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழக காவல்துறை கடத்திச் செல்லப்பட்ட சிலைகளை மீட்பதில் மிகுந்த முனைப்பு காட்டி வருகின்றது.

