செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
0cd6a707-dda2-4dca-9f7d-fc27563e15f6
-
Google News Preferred Icon

வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வு நிலை

சென்னை: தமிழகத்தில் அடுத்து வரும் நாள்களில் மழையின் அளவு மெல்ல குறையத் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 17ஆம் தேதி வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து வருவதாகவும் அம்மையம் கூறியது. எனினும் தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

14 தமிழக மீனவர்கள் விடுதலை

நாகை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 14 பேரை அந்நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த 15ஆம் தேதி தமிழக மீனவர்களை கடற்படை கைது செய்தது. இவர்கள் அனைவரும் நாகை, காரைக்கால், புதுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் ஆவர். கைதான மீனவர்கள் 14 பேரும் நேற்று முன்தினம் இலங்கையின் பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, மீண்டும் இலங்கை எல்லைக்குள் ஊடுருவி மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்று எச்சரித்து, அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

ஆறு விமானங்களில் வந்த பயணிகள் கடத்தி வந்த 8 கிலோ தங்கம் பறிமுதல்

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் எட்டு கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் அனைத்துலக சந்தை மதிப்பு ரூ.3.50 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். மொத்தம் ஆறு விமானங்களில் பயணம் செய்த நாற்பது பயணிகளிடம் இருந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. "தங்கம் கடத்தினால் கடும் தண்டனை விதிக்கப்படும் என்பது அனைவரும் அறிந்த தகவல்தான். எனினும், விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது என்பதை அறிந்திருந்தும்கூட தங்கம் கடத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது," என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீபாவளிச் சீட்டு நடத்தி ரூ.27 கோடி மோசடி செய்த நால்வர் கைது

திருவள்ளூர்: தீபாவளி பரிசுச் சீட்டு நடத்துவதாகக் கூறி 27 கோடி ரூபாய் மோசடி செய்த இருவரை காவல்துறை கைது செய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் தாமரைப் பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜே.பி.ஜோதி. இவர் பண்டிகை காலத்தை முன்னிட்டு சீட்டு நடத்துவதாகக் கூறி பலரிடம் பணம் வசூலித்துள்ளார். மேலும் சில கவர்ச்சி அறிவிப்புகளையும் வெளியிட்டதை அடுத்து ஏராளமானோர் பணம் செலுத்தி உள்ளனர். பல்வேறு பகுதிகளில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட முகவர்களை நியமித்துள்ளார் ஜோதி. அவர்கள் மூலம் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் அவர் பணம் வசூலித்துள்ளார். சீட்டு நடத்துவதில் ஜோதிக்கு அவரது மனைவி சரண்யாவும் துணையாக இருந்துள்ளார். எனினும் பல கோடி வசூல் செய்த இந்தத் தம்பதியர், உரிய நேரத்தில் பணம் செலுத்தியவர்களுக்கு அதை திருப்பிக் கொடுக்கவில்லை. இருவரும் திடீரென தலைமறைவாகினர். இருப்பினும் காவல் துறை தீவிர தேடுதல் வேட்டை நடத்தி இருவரையும் கைது செய்துள்ளனர்.