சென்னை: தமிழக பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் (படம்) ஆறு மாத காலத்துக்கு நீக்கப்படுவதாக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜகவின் வெளிநாட்டு, அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்து வந்தார் காயத்ரி ரகுராம்.
இந்நிலையில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாலும் காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் காயத்ரி ரகுராமிடம் கட்சி சார்பாக எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழக பாஜகவின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர்களைத் தவிர்த்து மற்றவர்கள் யூடியூப் தளங்களுக்கு நேர்காணல் வழங்க விருப்பப்பட்டால், அதுகுறித்து கட்சியின் ஊடகப் பிரிவுத் தலைவரிடம் தெரியப்படுத்த வேண்டும் என்றும் அவர் தமது அறிக்கையில் மேலும் அறிவுறுத்தி உள்ளார்.
இந்நிலையில் தாம் பாஜகவில் தொடர்ந்து நீடிக்கப் போவதாக காயத்ரி கூறியுள்ளார்.

