சென்னை: ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 பழங்காலச் சிலைகளை சென்னை காவல்துறை அதிரடியாக மீட்டுள்ளது.
அச்சிலைகள் பலகோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் என்றும் தரகர் மூலம் அவற்றை விற்பதற்கு விலை பேசப்பட்டு வந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முப்பது ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் இருந்து ஏராளமான அரிய, விலை மதிப்பற்ற சிலைகள் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கு கடத்திச் செல்லப்பபட்டுள்ளன. அவற்றை தமிழக காவல்துறையின் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஒவ்வொன்றாக மீட்டு வருகிறது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்கள், பழம் பொருள்களை விற்பனை செய்யும் கூடங்கள் ஆகியவற்றில் கடத்தப்பட்ட சிலைகள் இருப்பதைக் கண்டறிந்து, அவற்றின் மதிப்பையும் உறுதி செய்து, பல்வேறு நடைமுறைகளைப் பின்பற்றி சிலைகள் மீட்கப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
எனினும் மற்றொரு பக்கம் சிலைக் கடத்தல் நீடித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் உள்ள திருவான்மியூர் பகுதியில், குறிப்பிட்ட ஒரு வீட்டில் 15 பழங்காலச் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எந்நேரத்திலும் அவை தரகர் மூலம் விற்கப்படும் வாய்ப்புள்ளதை அறிந்த காவல்துறையினர் நேற்று முன்தினம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
காவல்துறையின் தனிப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் சிலை வாங்கும் வியாபாரிகள் போல மாறுவேடமிட்டு அந்த வீட்டுக்குச் சென்றனர். முன்னதாக சிலை விற்கும் தரகரான சுரேந்திரன் என்பவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. உண்மையான வியாபாரிகள் என்று நம்பிய அந்தத் தரகர், காவல்துறை அதிகாரிகளைச் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு 15 சிலைகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய, தரகர் சுரேந்திரனுடன் பேசியபடியே அவர்கள் நோட்டம் விட்டனர். எனினும் அதிகாரிகளின் பேச்சு, கண்காணிப்பால் சந்தேகமடைந்த தரகர் அங்கிருந்து ஓட்டம்பிடித்தார்.
அதன் பின்னர் அவ்வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அம்மன், புத்தர், சிவன், நடராஜர், நந்தி, நர்த்தன பிள்ளையார், ராமர், லட்சுமணர், சீதையின் சிலைகள் மீட்கப்பட்டன. அவை பலகோடி ரூபாய் மதிப்புள்ளவை என்று குறிப்பிட்ட காவல்துறை அதிகாரிகள், சிலைகளுக்கு உரிய ஆவணங்கள் ஏதும் அந்த வீட்டின் உரிமையாளர் ரமேஷ் பாந்தியாவிடம் இல்லை என்றனர்.
அவரிடம் விசாரணை நடத்தப்படுவதுடன், தப்பியோடிய தரகருக்கும் வலைவீசப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையின் போது இந்தச் சிலைகள் பல கோடி மதிப்புள்ளவை எனத் தெரிய வந்துள்ளது.

