வரும் கல்வியாண்டில் புதிய
பாடத் திட்டங்கள்: பொன்முடி
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களிலும் வரும் கல்வியாண்டில் புதிய பாடத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி, "அனைத்து கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு பாடத்திட்டத்தில் தமிழ், ஆங்கிலப் பாடங்கள் கட்டாயம் இருக்கவேண்டும் என பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, மாணவர்கள் எந்த பாடப் பிரிவில் படித்தாலும் அவர்களுக்கு வேலைக்கான திறன் வளர்ப்புப் பயிற்சி வழங்கப்படும். மேலும், பல்கலைக்கழகங்களில் முக்கிய தலைவர்கள் குறித்த பட்டயப் படிப்புகளும் கொண்டு வரப்பட உள்ளன," என்று தெரிவித்தார்.
நியாயவிலைக் கடையைச் சூறையாடிய 19 யானைகள்
வால்பாறை: கோவை மாவட்டம், வால்பாறை அருகே அரிசி உண்பதற்காக வந்த யானைக் கூட்டம் நியாயவிலைக் கடையின் கதவை உடைத்து அட்டகாசம் செய்தது. மாநில அரசுக்குச் சொந்தமான சிங்கோனா தேயிலைத் தோட்டத்துக்கு அதிகாலையில் வந்த 19 யானைகள் அந்தக் கடையின் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து, மூட்டை மூட்டையாக வைக்கப் பட்டிருந்த அரிசியை உண்டு சூறையாடின. தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானைகளை விரட்டினர். அங்கிருந்து நகர்ந்த யானைக் கூட்டம் வனத்தை ஒட்டிய தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டதால் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்த 10 இலங்கைத் தமிழர்கள்
இலங்கையிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடிக்கு வந்த 10 இலங்கைத் தமிழர்களுக்கும் தனித்தனி வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, வீட்டு உபயோகப் பொருள்களும் வழங்கப்பட்டன. படம்: தமிழக ஊடகம்
ராமேஸ்வரம்: இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த நாட்டிலிருந்து 10 பேர் நேற்று தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்துள்ளனர்.
இவர்களையும் சேர்த்து கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை தமிழகத்துக்கு வந்தவர்களின் எண்ணிக்கை 209 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
இலங்கை வவுனியா மாவட்டம், கணேசபுரத்தைச் சேர்ந்த 10 பேரும் தலைமன்னாரிலிருந்து நேற்று முன்தினம் இரவு படகில் புறப்பட்டு நேற்று அதிகாலை தனுஷ்கோடி கடற்கரையில் வந்து இறங்கினர்.
இலங்கையில் இருந்து படகில் வருவதற்கு கட்டணமாக ரூ.1.65 லட்சம் பணமும் ஒரு பவுன் தங்க மோதிரத்தையும் படகோட்டியிடம் கொடுத்ததாக விசாரணையின்போது அவர்கள் கூறினர்.

