சென்னை: குட்கா ஊழல் வழக்கு தொடர்பில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா உட்பட 21 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய் வதற்கு இவர்கள் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், இக்குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் 2013ஆம் ஆண்டில் குட்கா பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக 2016ஆம் ஆண்டில் மாதவராவ் என்ற குட்கா வியாபாரியின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் ரூ.250 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சோதனையின்போது கைப்பற்றப் பட்ட ஆவணங்கள் மூலம் முக்கிய துப்பு கிடைத்தது.
சென்னை செங்குன்றத்தில் மாதவராவ் நிறுவனம் தயாரிக்கும் எம்டிஎம் குட்காவை தடையை மீறி உற்பத்தி செய்யவும் அதே கிடங்குகளில் அவற்றைப் பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்பனை செய்யவும் உதவியதற்காக அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் ரூ.40 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஆவணங்களில் கூறப்பட்டிருந்தது.
அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வணிக வரித்துறை அமைச்சர் பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ், காவல்துறை, உணவு பாதுகாப்புத் துறை, வணிக வரித் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கும் எம்டிஎம் குட்கா நிறுவனத்தின் சார்பில் கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.
முதலில் தமிழகக் காவலர்கள் விசாரித்த இந்த வழக்கை 2018ல் சிபிஐ கையில் எடுத்தது.
இவ்விவகாரத்தில் மாதவராவ் உட்பட ஆறு பேர் கைது செய்யப் பட்டனர். அவர்கள்மீது 2018ல் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது.
அதுதொடர்பான விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த வாரம் சிபிஐ குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா உள்ளிட்ட 21 பேரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

