சென்னை: அரசுப் பேருந்துகளில் ரூ.10, ரூ.20 நாணயங்களை வாங்க மறுக்கும் நடத்துநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
10 ரூபாய் நாணயங்கள் மத்திய ரிசர்வ் வங்கி மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழு வதும் புழக்கத்தில் இருந்து வந்த நிலையில், 20 ரூபாய் நாணயமும் அறிமுகப்படுத்தப்பட்டது.
எனினும், 10 ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொள்வதைப் போல் 10 ரூபாய் நாணயங்களைப் பெற்றுக் கொள்வதில் பலரும் ஆர்வம் காட்டுவதில்லை.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இந்தப் பிரச் சினை பரவலாக இருந்து வரு கிறது. 10 ரூபாய் நாணயம் செல்லாது என அவ்வப்போது வதந்திகளும் பரவி வருகின்றன.
இதையடுத்து, 10 ரூபாய் நாணயம் செல்லும் என்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ரிசர்வ் வங்கியும் 10 ரூபாய் நாணயம் குறித்து விளக்கம் அளித்துள்ளது. எனினும், 10 ரூபாய் நாணயத்தை வாங்குவதற்கான தயக்கம் தொடர்ந்து இருந்துவருகிறது.
இந்நிலையில், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அ.அன்பு ஆபிரகாம் அனைத்து கிளை மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், மத்திய அரசால் வெளியிடப்படும் ரூ.10, ரூ.20 மதிப்பிலான நாணயத்தைப் பயணச்சீட்டு வாங்குவதற்காக நடத்துநரிடம் பயணிகள் அளிக்கும்போது அதனை மறுக்காமல் நடத்துநர்கள் பெற்றுக்கொண்டு, உரிய பயணச்சீட்டுகளை பயணி களிடம் வழங்கவேண்டும்.
எக்காரணம் கொண்டும் அந்த நாணயங்களை வாங்க மறுக்கக் கூடாது.
இதுதொடர்பாக ஏதேனும் புகார்கள் பெறப்பட்டால், சம்பந்தப்பட்ட நடத்துநர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அன்பு ஆபிரகாம் குறிப்பிட்டுள்ளார்.

