புதுடெல்லி: ஜல்லிக்கட்டுக்குத் தடைகோரி பீட்டா உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள் தொடர்ந்த வழக்கை இம்மாதம் 29ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்க நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டுவந்தால் என்ன என்று ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஜல்லிக்கட்டு, கம்பாளா, சக்கடி விளையாட்டுகளை நடத்த தமிழ்நாடு, மகாராஷ்டிர அரசுகள் இயற்றிய சிறப்புச் சட்டங்களை எதிர்த்து, பீட்டா உள்ளிட்ட அமைப்பு கள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பீட்டா அமைப்பின் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, ஜல்லிக்கட்டை கலாசாரம் என தமிழ்நாட்டால் கருதமுடியுமா? நாட்டு மாடுகளைப் பாதுகாக்கவும் அவற்றின் இன வளர்ச்சிக்கு உதவவும் ஜல்லிக்கட்டு பயன்படுகிறதா என்ற அடிப்படை யில் இவ்வழக்கு விசாரணை நடத்தப்பட வேண்டும் என வாதிட்டார்.
அத்துடன், விலங்குகளுக்கு தீங்கு இழைக்கப்படக்கூடாது என்பதே விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் நோக்கம் எனவும் விலங்குகளுக்கும் உரிமைகள் உள்ளன என்றும் லூத்ரா கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஜோசப், "மனிதர்களுக்கு உள்ள உரிமைகள் விலங்குகளுக்கு இல்லை," எனச் சுட்டிக்காட்டினார்.
ஒரு கொசு கடிக்கும்போது அதைக் கொன்றுவிட்டால், விலங்கு கள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டுமா அல்லது கொசுவிடம் இருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த வழக்கறிஞர் லூத்ரா, பாம்புகளுக்கும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் பொருந்தும் என்றும் பாம்பைக் கண்டால் தூர விலகிச் செல்ல வேண்டுமே தவிர அருகில் செல்லக் கூடாது என்றும் குறிப்பிட்டார்.
இதனைத்தொடர்ந்து, குதிரை, யானை பந்தயம், போலோ விளையாட்டுகள் நடத்துவதை அந்தந்த விலங்குகள் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கின்றனவா எனவும் நீதிபதி கள் கேள்வி எழுப்பினர்.
அத்துடன், குத்துச்சண்டை போட்டியாளர்களில் சிலர் உயிரிழந்து விடுவதையும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அதற்காக அந்தப் போட்டிக்குத் தடை விதிக்கமுடியுமா என்றும் கேட்டனர்.
எனவே, காளைகள் துன்புறுத்தப்படுவதாக பீட்டா அளித்துள்ள சில புகைப்படங்கள், தகவல்கள் ஒட்டுமொத்த விதிமுறைகளும் மீறப்படுகின்றன என்பதை நிரூபிப்பதற்கு போதுமானதாக இல்லை என்று தெரிவித்து இவ்வழக்கு விசாரணையை வரும் 29ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.