மதுரை: கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பில் அவரது பெண் தோழி சுவாதியை மதுரை நீதிமன்றத்தில் காவலர்கள் நேற்று முன்னிலைப்படுத்தினர்.
அப்போது பேசிய நீதிபதிகள், "சாதி, சமயத்தைவிட சத்தியம், தர்மம், நியாயம்தான் முக்கியம். உண்மையை மறைத்தால் உங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்," என சுவாதியை எச்சரித்தனர்.
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவரான கோகுல்ராஜ். இவர் கடந்த 2015ல் நாமக்கல் மாவட்டம், தொட்டிப்பாளையம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்த நிலையில் மீட்கப்பட்டார்.
அவர் சுவாதி என்பவரைக் காதலித்ததாகவும் இந்த விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை, மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு காவலர்கள் நேற்று முன்னிலைப் படுத்தினர்.
அப்போது நீதிபதிகள், "கோகுல்ராஜ் உங்களுடன் படித்தாரா? அவருடன் பேசுவீர்களா?" என சுவாதியிடம் கேட்டனர். அதற்கு அதிகமாகப் பேசுவேன் என சுவாதி பதிலளித்தார்.
இதனைத்தொடர்ந்து, கோவி லுக்கு கோகுல்ராஜும் சுவாதியும் வருவது போன்ற ஒரு காணொளிக் காட்சியைக் காண்பித்து இவர்கள் யார்? என கேள்வி எழுப்பினர்.
"அந்தக் காணொளியில் இருப்பது நானல்ல," எனத் தெரிவித்த சுவாதி, பின்னால் வருவது கோகுல்ராஜ் போல் உள்ளதாகக் கூறினார்.
மீண்டும் காணொளி ஒளிபரப்பப்பட்டது. "நீங்கள் உண்மையைச் சொல்லவேண்டும் என்பதற்காகத்தான் இத்தனைமுறை கேள்வி கேட்கிறோம்," என்று நீதிபதிகள் கூறினர். சுவாதி அது தான் அல்ல என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
தொடர்ந்து நீதிபதிகள், "நீங்கள் அழுதாலும் உங்களிடம் இருந்து உண்மையை மட்டுமே நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்றனர்.
காணொளிக் காட்சியில் கோகுல்ராஜுடன் இருப்பது தான் அல்ல என்று தொடர்ந்து நீங்கள் கூறினால், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என சுவாதியை நீதிபதிகள் எச்சரித்தனர்.
இதனிடையே, சுவாதியை வரும் புதன்கிழமை மீண்டும் முன்னிலைப்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முன்னதாக, கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பில் கைதான யுவராஜ், அருண், சிவகுமார், சதீஷ்குமார், தர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் ஆகிய 10 பேருக்கும் சாகும் வரை சிறைத் தண்டனை விதித்தும் ஐவரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் தங்களுக்கு விதித்த தண்டனையை ரத்து செய்யக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
இம்மனுக்களை நீதிபதிகள் ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் விசாரித்து, சுவாதியை போதுமான பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உத்தரவிட்டனர்.

