சென்னை: நடிகைகளிடம் மன்னிப்புக் கேட்பதுடன், 'இனி பெண்கள் குறித்து அவதூறாகப் பேசமாட்டேன்' என பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்யும்படி திமுக பேச்சாளர் சைதை சாதிக்கிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் நடந்த திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய சைதை சாதிக், பாஜக நிர்வாகிகளும் நடிகைகளுமான குஷ்பு, கௌதமி, நமீதா, காயத்ரி ரகுராம் ஆகியோரை தரக்குறைவாக விமர்சித்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கு பல தரப்பினர் மத்தி யிலும் கண்டனங்கள் எழுந்த நிலையில், காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டது.
"ஒரு சக பெண்ணாகவும் மனிதராகவும் இந்தப் பேச்சுக்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கொள் கிறேன்," என திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழியும் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், தன்னைக் காவலர்கள் கைது செய்வதில் இருந்து தப்பித்துக் கொள்ள உயர் நீதிமன்றத்தில் முன் பிணை கோரியிருந்தார் சைதை சாதிக்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, பெண்கள் குறித்து அவதூறான கருத்துகளை மனுதாரர் தெரிவித்து இருப்பதால், அவர் பகிரங்க மன்னிப்பு கோரி, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை இம் மாதம் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
அதுவரை சைதை சாதிக்கை கைது செய்யக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இடமிருந்து: நடிகைகள் குஷ்பு, கௌதமி, நமீதா, காயத்ரி ரகுராம். வலது: திமுக பேச்சாளர் சைதை சாதிக்.
படங்கள்: தமிழக ஊடகம்

