ஈரோடு: சோதிடர், கோயில் பூசாரி ஆகியோரின் பேச்சைக்கேட்டு பரிகாரப் பூசை செய்த அரசு ஊழியர் ஒருவர், தனது நாவை இழந்து வாய் பேசமுடியாமல் அவதிப்பட்டு வருகிறார்.
ஈரோடு மாவட்டம், கோபிச் செட்டிப்பாளையத்தில் உள்ள கிராமத்தில் வசிக்கும் அரசு ஊழியர் ஒருவரின் கனவில் நெடு நாள்களாகவே பாம்புகள் வந்து தொந்தரவு கொடுத்துள்ளன.
இதனால் தூக்கமின்றி பல நாள்களாக தவித்து வந்தவர், இதுகுறித்து தங்களது குடும்ப சோதிடரிடம் காரணம் கேட்டுள்ளார்.
இதையடுத்து அவரை பாம்புப் புற்று இருக்கும் இடத்திற்கு சோதிடர் அழைத்துச் சென்றுள்ளார். அங்கிருந்த கோயில் பூசாரி கூறியபடி, புற்றின் முன்பு நாக்கை நீட்டி சில மந்திரங்களைக் கூறி, காற்றை ஊதியுள்ளார் அரசு ஊழியர். அப்போது, புற்றில் இருந்த பாம்பு திடீரென வெளியேறி அரசு ஊழியரின் நாக்கில் கடித்துள்ளது. வலியால் துடித்தவரை ஈரோடு மருத்துவமனையில் சேர்த்தனர். பாம்பின் நஞ்சினால் நாக்கில் உள்ள திசுக்கள் அழிந்துவிட்ட நிலையில் அரசு ஊழியரின் நாக்கு துண்டிக்கப்பட்டது.

