'எல்லா மாநிலங்களையும் விஞ்சிவிட்டது; நாட்டின் தொழிற்சாலைகளில் 15% தமிழகத்தில்'
புதுடெல்லி: இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் ஆக அதிக தொழில் பெருக்க மாநிலமாகத் திகழ்கிறது என்று ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அண்மையில் அறிக்கை ஒன்றில் தெரிவித்து இருக்கிறது.
அந்த மாநிலத்தில் மொத்தம் 38,877 தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இந்தியாவில் இயங்கும் மொத்த தொழிற்சாலைகளில் இது 15.7% என்று அந்த வங்கி கூறி இருக்கிறது.
இந்தியாவிலேயே தொழில் பெருக்கத்தைப் பொறுத்தவரை தமிழ்நாட்டை மிஞ்சும் வேறு மாநிலம் இப்போது இல்லை என்று அது அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறது.
குஜராத்தில் மொத்தம் 28,479 தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இந்த மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 82% கூடி வந்திருக்கிறது.
ஆனாலும்கூட தமிழ்நாட்டைவிட குஜராத்தில் 10,000 தொழிற்சாலைகள் குறைவாகவே இருக்கின்றன என்று ஆர்பிஐ தெரிவிக்கிறது.
தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளின் பெருக்கம் 45% கூடி வருகிறது. தொழிற்சாலைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை 25,610 ஆலைகளுடன் (10.3%) மகாராஷ்டிரா மாநிலம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
ஆந்திரப் பிரதேசத்தில் 19,924 ஆலைகள் செயல்படுகின்றன. இது 6.8% அளவுடன் நான்காவது இடத்தில் உள்ளது. மொத்தம் 19,184 (6.5%) ஆலைகளுடன் உத்தரப் பிரதேசம் 5வது இடத்தில் உள்ளது.
தமிழ்நாடு 2030வது ஆண்டு வாக்கில் டிரில்லியன் டாலர் (டிரில்லியன் என்பது மில்லியன் மில்லியனாகும்) பொருளியலைச் சாதிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து இருக்கிறது.
இந்தியாவில் மட்டுமன்றி அனைத்துலக அளவிலும் முன் னணி வகிக்க தமிழ்நாடு விரும்பு கிறது. இந்த இலக்கை நிறைவேற்றும் வகையில் அனைத்துலக முதலீடுகளை ஈர்க்க அந்த மாநிலம் பெரிய அளவிலான முயற்சிகளை முடுக்கிவிட்டது.
இந்த இலக்கைச் சாதிக்க தமிழ்நாடு அடுத்த எட்டு ஆண்டுகளில் ரூ.45 லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்க வேண்டும் என்று அந்த மாநிலத்தின் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அண்மையில் தெரிவித்தார். இந்தியா 2028-2029 நிதி ஆண்டில் $5 டிரில்லியன் பொருளியல் இலக்கை நிர்ணயித்து இருக்கிறது.

