சென்னை: ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன் ஆகிய இருவரையும் அதிமுகவில் மீண்டும் இணைத்துக்கொள்ள வாய்ப்பே இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
எதிர்வரும் 5ஆம் தேதி அன்று, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற உள்ளது.
இதில், பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்த உள்ளனர்.
அன்று மாலை அதிமுக சார்பில் நடைபெறும் மற்றொரு நிகழ்வுக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையேற்பார் என்றும் அந்நிகழ்வில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன் ஆகியோரும் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதன் மூலம் பிளவுபட்டுள்ள அதிமுக, மீண்டும் இணைவதற்கான முதல் அடி எடுத்து வைக்கப்பட இருப்பதாகவும் மிக விரைவில் சசிகலாவும் அதிமுகவில் அதிகாரபூர்வமாக இணைவார் என்றும் ஊடகங்களில் ஆருடச் செய்திகள் வெளியாகி உள்ளன.
நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், டிடிவி.தினகரன் மீண்டும் அதிமுகவில் இணைய வாய்ப்பில்லை என்றார்.
"ஓபிஎஸ், தினகரன் குறித்து செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறீர்கள். அவற்றுக்கு பதில் அளித்து, புளித்துப் போய்விட்டது. அது முடிந்து போன கதை. தொடரும் கதை அல்ல. அவ்வாறு நடக்க வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிசாமியே கூறிவிட்டார்," என்று ஜெயக்குமார் மேலும் கூறினார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் பல்வேறு அணிகளாக பிரிந்துகிடக்கும் அதிமுகவை ஒருங்கிணைத்து பெரும் கூட்டணியை அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜெயக்குமார் தெரிவித்த கருத்து அதிமுக, பாஜக வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

