திருச்சி: பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும் அறிவியல், கணித ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் 'வானவில் மன்றம்' என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு தொடங்கி உள்ளது.
'எங்கும் அறிவியல் யாவும் கணிதம்' என்ற முழக்கத்துடன் அமலுக்கு வந்துள்ள இந்தத் திட்டம், மாணவர்களுக்கு பெரிதும் கைகொடுக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும் எதையும் ஆராய்ந்துப் பார்த்து கேள்வி கேட்கும் பழக்கத்தை உருவாக்கவும் அறிவியல், கணிதம் தொடர்பாக புதியவற்றை அறிந்துகொள்ளும் எல்லையில்லா ஆர்வத்தை உண்டாக்கவும் இம்மன்றம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
"அரசுப் பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அறிவியலையும் கணிதத்தையும் கற்றுத் தரும் ஆசிரியர்களுக்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
"கற்பித்தலில் இதுவரை அவர்கள் கையாண்ட வழிமுறைகளை பகிர்ந்து கொள்வதற்கும் இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்திட ஆலோசனைகள் வழங்குவதற்கும் மாநிலம் முழுவதும் இத்திட்டத்தில் பங்கு பெற விருப்பம் தெரிவித்த ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது," என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய திட்டத்தின் மூலம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவை தொடர்பில் மாணவர்களின் அறிவாற்றலை வளர்த்தெடுக்கும் வகையில் நடமாடும் ஆய்வுக் கூடங்கள் செயல்படும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநிலம் முழுவதும் உள்ள 13,000 பள்ளிகளைச் சேர்ந்த 25 லட்சம் மாணவர்கள் இதன் மூலம் பயனடைவர் என்றும் தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் கூறியுள்ளார்.

